இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 28, 2010

நீங்கள் தவ்ஹீத்வாதிகளா?

தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும், தொப்பி அணியாமல் தொழுவதையும், தாடி வளர்ப்பதையும், கரண்டைக் காலுக்கு மேல் கை­ கட்டுவதையும், சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும் தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா?

இதை மட்டும் நீங்கள் கடைப்பிடித்து, மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் தவ்ஹீத் கொள்கையை நிலைநாட்டப் போராடினால் நீங்கள் தவ்ஹீத்வாதிகள் ஆகி விடுவீர்களா? இது மட்டும் தான் தவ்ஹீத் கொள்கையா? உங்களிடம் தவ்ஹீதில் உறுதியான கொள்கை பிடிப்பு இருக்கிறதா என்பதை மக்கள் எப்படிக் கணிக்கிறார்கள் தெரியுமா?

உங்கள் வாழ்நாளில் வரும் பல விஷயங்களைக் கவனித்து அதில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே தவ்ஹீதின் கொள்கைப் பிடிப்பின் அளவை கணக்கிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, திருமணம் செய்வதில் ஏகத்துவவாதிகளின் கொள்கைப் பிடிப்பை அளவிடுகிறார்கள்.

ஏகத்துவத்தின் பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் திருமணம் என்ற நிகழ்ச்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.

திருமணத்தில் திருக்குர்ஆன் நபிவழியின் படி நடக்கிறார்களா? இல்லை பேருக்குத் திருமணத்தை நடத்துகிறார்களா? என்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகளின் திருமணம் பெயருக்கு இஸ்லாமிய திருமணமாகக் காட்சி தருகின்றது.

ஆம்! இன்று தவ்ஹீத்வாதிகள் என்று கூறுபவர்களின் திருமணமும் அதன் பின்னணியும் அவர்களின் கொள்கைப் பிடிப்பைத் தெளிவாக அடையாளம் காட்டத் தான் செய்கிறது.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

இந்த வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத்வாதிகள் சில ரூபாய்களை அல்லது சிறிதளவு தங்கத்தை மஹராக கொடுத்து. ஒரு பயான் ஒன்றையும் வைத்து விட்டு நாங்கள் நபிவழித் திருமணம் செய்து விட்டோம் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக நபிவழியைப் பின்பற்றி திருமணம் செய்யவில்லை.

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி) நூல்: புகாரி (5090)

மணமகளை மார்க்கம் உள்ளவளாகத் தேர்வு செய்ய நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தும் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் மார்க்கம் தெரிந்தவளாக உள்ள பெண்ணை விட்டுவிட்டு, அழகும் பணமும் நிறைந்த பெண்ணையே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள்? எவ்வளவு சொத்துக்கள் தேரும்? என்பதைக் கணக்கிட்டே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது.

''அழகான பையன், வீட்டிற்கும் ஒரே பையன், நீங்கள் எந்த வரதட்சணையும் தர வேண்டியதில்லை; 20 பவுன் நகையை உங்கள் பெண்ணுக்குப் போட்டால் போதும்; ஒரு ஐம்பதாயிரம் பணத்தை மகள் பெயரில் வங்கியில் போட்டு விடுங்கள்'' என்று கூறி திருமண ஒப்பந்தத்தை இரகசியமாகச் செய்து கொள்பவர்கள் உண்மையில் தவ்ஹீத் மாப்பிள்ளையா? இப்படிப் பேரம் பேசும் பெற்றோரின் நடவடிக்கைகளுக்கு ஒத்து போகுபவர்கள் தவ்ஹீத் மாப்பிள்ளையா?

வசதி படைத்த பெண்ணை முடித்து விட்டால் அவர்களிடமிருந்து பின்னர் சுருட்டி விடலாம் என்ற எண்ணமும் உள்ளூர இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் சும்மாவா அனுப்பி விடுவார்களா? மருமகனுக்குப் பிற்காலத்தில் எதையும் தராமலா போய் விடுவார்கள்? என்ற நப்பாசை தான் வசதி படைத்த வீட்டுப் பெண்ணை, அப்பெண் மார்க்கம் தெரியாமல் இருந்தாலும் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது.

இஸ்லாத்தை ஏற்பதையே மஹராக ஆக்கிக் கொள்கிறேன் என்று கூறி அபூதல்ஹா (ரலி ) அவர்களை இஸ்லாத்தின் பால் கொண்டு சேர்த்த உம்மு ஸுலைம் (ரலி ) அவர்களின் கொள்கைப் பிடிப்பில் கொஞ்சமாவது தவ்ஹீத்வாதிகளிடம் வர வேண்டாமா?

''வரதட்சணை கொடுத்து எங்களைத் திருமணம் செய்து வைக்க வேண்டாம். நபிவழித் திருமணமாக இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்'' என்று உறுதியோடு இருக்கும் பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் முடித்துக் கொள்ளாவிட்டால் வேறு யார் தான் முடிப்பார்கள்? கொள்கையில் பிடிப்புள்ள பெண்களை திருமணம் புரிவதற்கு முன்வராதவர்கள் தவ்ஹீத்வாதிகளா?

மஹர் என்ற பெயரில் சில ரூபாய்களை கொடுத்து விட்டு பல இலட்சங்களை கொள்ளை வாசல்வழியாக எடுக்கத் திட்டம் போடுபவர்கள் தவ்ஹீத் கொள்கைவாதிகளா? திருமணத்தை ஆடம்பரமாக நடத்துபவர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்களா?

மறுமை நாள் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்பும் தவ்ஹீத்வாதிகள், நம் உள்ளத்தில் உள்ளதை அறிந்த அந்த அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச உணர்வுடன், திருமணம் உட்பட அனைத்திலும் திருக்குர்ஆன் நபிவழிகளை முழுமையாகப் பின்பற்றி நடக்க வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? ''அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!'' என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது. (அல்குர்ஆன் 9:38)

Aug 25, 2010

அன்புள்ள அப்பா!




குழந்தை வளர்ப்பு என்பது பெரும்பாலான ஆண்களைப் பொறுத்த வரை பெண்கள் சமாச்சாரம். குழந்தையை விரும்புகிற அப்பாக்கள் கூட, கைக் குழந்தையைத் தூக்கவோ அதைக் கவனித்துக் கொள்ளவோ தயாராக இருப்பதில்லை. காரணம் குழந்தையை தூக்கும் போது சிறுநீர், மலம் கழிக்கலாம். அல்லது வாந்தி எடுக்கும். இதனால் அருவருப்பு அடையும் அப்பாக்கள் சிலர் குழந்தைப் பருவ சிரமங்களைக் கடந்த பிறகு, குழந்தை ஓரளவுக்கு வளர்ந்த பிறகே அதன் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இந்த மனப்பான்மை மிகத் தவறானது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். குழந்தை வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்தே அப்பாக்களும் பழக்கப்படுத்தபட வேண்டும் என்கிறார்கள் அவர்கள். எந்தெந்த விதங்களில் குழந்தை வளர்ப்பில் பங்கு கொள்ளச் செய்ய முடியும் என்பதற்கு சில யோசனைகள். பிறந்த குழந்தையைத் தூக்க முதல் நாளிலிருந்தே தன் கணவனுக்கே கற்றுத்தர வேண்டும் மனைவி. கழுத்து நிற்காத குழந்தையை எப்படி பிடித்துக் கொள்ள வேண்டும், எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிரண்டு முறைகள் கற்றுக் கொடுத்தால் பழகி விடும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு பாலாடையில் அல்லது பாட்டிலில் எப்படிப் பால் கொடுக்க வேண்டும் என்பதை குழந்தையின் அப்பாவுக்கும் கற்றுத் தரலாம். இதனால் குழந்தை அழும்போதெல்லாம் பிரசவித்த தாய் எழுந்து, உடலை வருத்திக் கொள்ளாமல் சற்று நேரமாவது ஓய்வெடுக்க முடியும். கணவன்&மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்களானால் குழந்தைக்குச் செய்ய வேண்டிய வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது, சாப்பாடு கொடுப்பது போன்றவற்றை ஒருவரும், இரவில் அதற்குச் சாப்பாடு கொடுத்துத் தூங்க வைப்பதை இன்னொருவரும் பிரித்துக் கொள்ளலாம். என்ன தான் பிசியான வேலையில் இருந்தாலும், தினம் சிறிது நேரத்தைக் குழந்தையுடன் செலவிடுவதை வழக்காமாகக் கொள்ளும்படி அவரைப் பழக்குங்கள். அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் சில குழந்தைகள் குழந்தை ஏதேனும் பேச முயற்சி செய்யும். அம்மாவிடம் கூட இப்படி இருக்காது. அவற்றறைக் காது கொடுத்து கேட்க வேண்டியது முக்கியம். எனக்கு நேரமில்லை அம்மா கிட்ட சொல்லு என்று தட்டிக் கழிப்பதுதான் உதாசீனப்படுத்தப் படுகிறோம் என்ற உணர்வைக் குழந்தையின் மனதில் ஏற்படுத்தி விடும். குழந்தை விருப்பமானதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதோடு அப்பாக்களின் கடமை முடிந்து விடுவதில்லை. தன் அன்பை அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும். வார்த்தைகளாலும், செயல்களாலும் மட்டுமே அன்பைக் குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும். குழந்தையின் பள்ளிக்கூடத்தில் விசேஷ நாட்கள், ஆண்டு விழா போன்றவற்றிற்குத் தவறாமல் தந்தை செல்ல வேண்டும்.

அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு.



குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான்.
எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைக் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை.
தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு.
இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம்.
இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக நீங்கள் இருக்கிறீர்களா?
நல்ல அப்பாவுக்கு அளவுகோல் என்ன?
இங்கே பத்து வழிகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக மட்டுமின்றி நல்ல குடும்பத் தலைவனாகவும் இருக்க முடியும்.

1. உங்கள் குழந்தையின் தாயை மதியுங்கள்
ஒரு நல்ல அப்பாவுக்கு மிக முக்கியமான தகுதி என்ன தெரியுமா? அவர் தனது மனைவியை மதிக்க வேண்டும். உங்கள் திருமண உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தாலும், உங்கள் குழந்தையின் தாய்க்கு உரிய மரியாதை தர வேண்டும்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இது தங்கள் குழந்தைகளுக்குத் தெரியும்படி நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களுக்குப் பாதுகாப்பான சூழல் இருப்பதாக கருதும்படி செய்ய வேண்டும்.
தங்களுடைய தாயும் தந்தையும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைப் பார்க்கும் குழந்தைகள், இருவரையும் மனதார ஏற்று அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.

2. குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்
‘‘உங்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி’’ என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதைவிட்டு, எப்போதும் பிஸியாக இருப்பது போல அலைந்து கொண்டிருந்தால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்கள் குழந்தைகள் நினைத்து விடக்கூடும். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டர்கள்.
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் வேகமாக வளரக்கூடியவர்கள். அவர்கள் இழக்கும் சந்தோஷங்களை எப்போதும் திரும்பப் பெற முடியாது என்பதை உணருங்கள்.

3. குழந்தைகளின் பிரச்சனைகளை கேளுங்கள்
‘‘ஒங்க அப்பா ஏதோ சொல்லணும்னார்’’ ‘‘அப்பா வரட்டும் பேசிக்கலாம்’’ என்று குழந்தைகளிடம் அம்மா கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் தவறுகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. நீங்களும் உங்கள் சிறு வயதில் தவறுகள் செய்தவர்தான்.
எனவே, உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களுக்கு எளிதில் புரியும்படி பிரச்சனைகளை விளக்குங்கள். தங்கள் செயலுக்கு அவர்கள் சொல்லும் நியாயங்களைக் கேளுங்கள். அவர்களை நேர்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு குழ்ப்பிவிடாதீர்கள்.

4. அன்பு கலந்த ஒழுங்கு அவசியம்
எல்லா குழந்தைகளுக்கும் ஒழுங்கு கட்டுப்பாடு அவசியம்தான். தங்களை வழிநடத்த வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அதேசமயத்தில், அதற்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின் விளைவுகளை விளக்குகள். அவர்களுடைய விரும்பத்தக்க நடத்தைகளை அர்த்தத்துடன் பாராட்டுங்கள். குழந்தைகளிடம் கட்டுப்பாட்டுடனும், அமைதியான விதத்திலும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

5. முன்மாதிரியாக இருங்கள்
அப்பாக்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, குழந்தைகளுக்கு அவர்கள்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தந்தையின் பாதிப்பு இல்லாத குழந்தைகள் மிகவும் அரிது. அப்பாவுடன் நிறைய நேரத்தை செலவிடும் பெண்குழந்தை வளரும்போது, பையன்களால் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தந்தையின் குணாம்சத்தை கணவரிடமும் எதிர்பார்க்கிறாள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை மகனுக்குத் தந்தை புரியவைக்க வேண்டும். நேர்மையையும் பொறுப்புணர்வையும் கற்றுத்தர வேண்டும். உலகம் முழுவதும் நாடக மேடை. அதில் ஒரு அப்பாவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செம்மையாக செய்ய வேண்டும்.

6. ஆசிரியராய் இருங்கள்
கற்றுக் கொடுப்பது அடுத்தவருடைய வேலை என்று அப்பாக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நல்லதையும் கெட்டதையும் பற்றி தனது குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் அப்பா, தனது குழந்தைகள் மிகச் சிறந்த காரியங்களை செய்ய ஊக்குவிக்கும் அப்பா, தனது குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். அன்றாட நிகழ்வுகளை உதாரணமாக்கி தனது குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படையைப் புரியவைக்க ஒரு அப்பாவால் முடியும்.

7. குடும்பத்துடன் சாப்பிடுங்கள்
மூன்று வேளைகளில் ஏதேனும் ஒரு வேளை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமான குடும்ப உறவுக்கு மிகவும் முக்கியமானது. பரபரப்பான வாழ்க்கையில் இந்த பகிர்தல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்யப்போகிறோம் என்பதை உங்களிடம் கூறுவார்கள். அவர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களுக்கு அலோசனை வழங்குவதற்கு அப்பாக்களுக்கு நேரம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தினர் அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிடுவதில் கிடைக்கிற சந்தோஷம் ரொம்பவும் முக்கியம்.

8. குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்
இன்றைய உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணையதளங்களும் குழந்தைகளின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டன. இத்தகைய சூழலில் அவர்களுக்காக படித்துக் காட்டுவதற்கு அப்பாக்கள் முயற்சி செய்ய வேண்டும். காரியங்களில் ஈடுபடும்போதும், படிக்கும் போதும், பார்க்கும்போதும், கேட்கும்போதும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்குப் படித்துக்காட்டி படிக்கும் பழக்கத்திற்கு தயார்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகும் போது, தாங்களாகவே படிப்பதற்கு ஊக்குவியுங்கள். படிப்பின் மீது காதல் கொள்ளும் வகையில் உங்கள் பிள்ளையை தயார்படுத்திவிட்டால், அவர்களுடைய வாழ்க்கை வளமாகிவிடும். தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கும் படிப்பு மிகச்சிறந்த துணையாகும்.

9. பிரியத்தோடு இருங்கள்
தாங்கள் விரும்பப்படுகிறோம். தங்கள் குடும்பத்தினரால் அன்பு செலுத்தப்படுகிறோம். அவர்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்பது தெரியும்போதுதான் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. குழந்தைகளிடம் பேசுவதையும் அவர்களை அணைத்து முத்தமிடுவதையும் அப்பாக்கள் விரும்பவேண்டும். தினந்தோறும் குழந்தைகளை அணைத்து கொஞ்சிப் பாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்திப் பாருங்கள். குழந்தைகளிடம் மிகப்பெரிய மாறுதலை காண்பீர்கள்.

10. அப்பாவுக்கு நிகர் அப்பாதான்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் அப்பாவின் ஆலோசனைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்தான் இருப்பார்கள். பள்ளிப் படிப்பை தொடர்வதாகட்டும், புதிய வேலையில் சேருவதாகட்டும், திருமணமாகட்டும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து, தங்களுடைய சொந்த குடும்பத்தை உருவாக்கும் வரையில் அப்பாவின் பங்கு மிகவும் அவசியமானது. எனவே, நீங்கள் நல்ல அப்பாவாக மாறுங்கள்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை.........




குழந்தைகளிடம் வளர வேண்டியதும், வளர்க்கப்பட வேண்டியதும் தன்னம்பிக்கை. சிறுவயதில் ஊன்றப்படுகின்ற தன்னம்பிக்கை வித்துதான், பெரியவர்களாகின்ற போது விருட்சமாக வளர்ந்து மிகப் பெரிய மரமாகிறது.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளராமல் போவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பரிணாம ரீதியாகவே குழந்தை வளர்கின்றபோது, எதையும் தானே செய்ய வேண்டும் என்கிற முனைப்பு அதனுடன் கூடவே சேர்ந்து வளர்கிறது.

ஆனால் குழந்தைகளைக் கண்டிப்புடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் பெற்றோர்கள் குழந்தையின் சுதந்திரமான செயல்பாடுகறுக்குத் தடைபோட்டு விடுகிறார்கள். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைவிட, எதைச் செய்யக் கூடாது என்று சொல்வதுதான் பெரியவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

ஆழமான விளைவுகளைப் பற்றிப் பெற்றோர்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாகப் பெற்றோர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகின்றபோது பாதுகாப்பற்ற நிலையினையே உணர்கிறார்கள். தங்களுடைய திறமையில் அவர்களுக்கு நம்பிக்கை வருவதில்லை.

குழந்தைப் பருவத்தில் விதிக்கப்பட்ட தடை உத்தரவுகள் அனைத்தும் ஆழ்மனப் பதிவுகளாகி, நம்மால் முடியாது என்கிற அவநம்பிக்கையினைத் தோற்றுவித்து விடுகின்றன. சரி சிந்தனைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

குழந்தைப் பருவத்தில் எந்த ஒரு காரியத்தையும் குழந்தைகள் சிந்திக்காமல் செய்வதில்லை. காரணம் சிந்தனைகள் உருவாகி வளர்கின்ற பருவம் இது. உதாரணமாக குழந்தைகள் எதைப் பார்த்தாலும் சிந்திக்கத் தொடங்குகின்றன.

ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதனால் கவரப்பட்டு அதைத் தொட்டுப் பார்த்து உணர ஆசைப்படுகிறது. இதெல்லாம் சங்கிலித் தொடர் போன்ற சிந்தனை வளையங்களின் விளைவு. குழந்தைகளிடம் சிந்தனைப் பரிணாமம் இப்படித்தான் உருவாகிறது. செயல்கள் சிந்தனையால் உந்தப்படுகின்றன. சிந்தனை இல்லாமல் செயல் இல்லை

பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்..



முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தோம் அப்பா அம்மா தனியாகவும் குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன் படுப்பாங்க. ஆனால் இப்ப தனி குடும்பமாக இருப்பதால் குழந்தைகளை அப்பா,அம்மாவுடன் படுக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அப்படி ரூம்மில் ஒன்றாக படுக்கும் குழந்தையின் முன்பு பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.. வயது முதல் 13 வயது வரை இருக்கும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் மிகந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பார்க்கும் அனைத்து விஷயங்களும் மனதில் பதியும் நேரம். மனதில் ஏதாவது விஷயங்கள் பதிந்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் மனதினை விட்டு நீங்காது மனநலக் கோளாறுகள் வரலாம்.

முடிந்த வரை சிறு வயதில் குழந்தையினை தொட்டிலில் போட்டு பழக வேண்டும். அப்பொழுது கூட கட்டிலின் அருகில் தொட்டியில்லாமல் இருப்பது நலம். சின்ன சின்ன சப்தங்கள் கூட இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தலாம்.குழந்தைகள் தூங்காமல் இருக்கும் பொழுது கட்டாயமாக கணவர்,மனைவிகள் நெருக்கமாக இருக்கக்கூடாது. பார்க்ககூடாதை குழந்தைகள் பார்த்துவிட்டால் தாய் தந்தை மீது குழந்தைக்கு வெறுப்பு காட்ட தொடங்கும். அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் ஒருவித வெறுப்புடனே இருப்பதாக மனநல மருத்துவர் கூறுகிறார்கள். ஆகையல் அவங்களுக்கு திருமணத்தில் கூட நாட்டமில்லாமல் போகுமாம்.அல்லது குழந்தைகளுக்கு வேறு விதமான பாதிப்புகள் கூட வரலாம். குழந்தைகள் பார்த்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆராயுமாம். இந்த தேடல் அவர்களை கெட்டழிந்த போய்விடவும் வாய்ப்புண்டு.

குழந்தையினை நாமே கெட்டுபோக வழி செய்யாமால் நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம். அதுக்கு சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா அம்மாவுக்கு நடுவில் குழந்தையினை படுக்க வைத்துவிட்டு குழந்தை நன்றாக தூங்கிய பின்பு வேறு ரூம்மிலோ அல்லது அதே ரூம்மிலோ இல்லறத்தில் ஈடுபடலாம்.5 வயதுக்கு மேல் வெளி நாடுகளில் இருக்கும் பழக்கம் போல் தனி அறையில் படுக்க வைப்பது நல்லது. முதல் கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாக இருக்கும். போக போக பழகிவிடும். அவர்களை தனிமையில் படுக்க வைத்தாலும் உங்கள் மேல் பார்வையில் குழந்தையிருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.ஒரே ரூம் தான் இருக்கு நாங்க என்ன செய்வது என்று கேட்கிறிங்களா? வளரும் குழந்தைகள் வீட்டில் இல்லாத பொழுது இல்லறத்தில் ஈடுபடலாம்.. இதற்கு கணவர் மனைவி இருவரும் குழந்தையின் நலன் கருதி சில விஷயங்களை தியாகம் செய்து தான் ஆகனும்.

Aug 24, 2010

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.

தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும். (நூல் : பைஹகீ)

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

பகலெல்லாம் உழைத்துக்களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என நபியவர்கள் கூறினார் கள். (ஆதாரம் : முஃஜம்)

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.

அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.

பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை - மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது. மேலும் நபிமார்களும், அறிஞர்களும், வணக்க சாலிகளும் தமது வாழ்க்கையின் ஓர் அங்கமாக உழைப்பை ஆக்கிக் கொண்டனர்.

நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள் - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்- ஆடு மேய்த்தல்

சரித்திரத்தை உற்றுநோக்கும் போது நபிமார்கள், வலிமார்கள், அறிஞர்கள் அனைவரும் தங்களது கரங்களால் உழைத்தே சாப்பிட்டுள்ளார்கள். கலீஃபா உமர்(ரலி) அவர்களும் தங்களின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள். உலமாக்களே! நன்மையான விஷயத்தில் முந்துங்கள். இறையருளைத் தேடுங்கள். மக்களின் மீது கடுமையாக ஆகி விடாதீர்கள். ஆதாரம்: ஜாமிஉ பயானில் இல்மி,வஃபர்ளிஹி

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சில வற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், உங்களுடைய பொருட்களை உங்களிடையே தவறான முறையில் (ஒருவருக்கொருவர்) உண்ணாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே மனிதர்களின் பொருட்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணும் பொருட்டு, அவற்றை அதிகாரிகளிடம் (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள். (அல்குர்ஆன். 2:188)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

ஹலாலான உணவுதான் நல்ல அமல் செய்ய உதவும்; ஆகையால்தான், இறைவன் தன் அருள்மறையில், "இறைத்தூதர்களே! ஹலாலான உணவை உண்ணுங்கள். நல்ல அமல்கள் செய்யுங்கள். நீங்கள் செய்கின்ற அமலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்" எனக் கூறியுள்ளான். ஹலாலான உணவுக்கும் நற்செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது இவ்வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காது.

ஹிஜ்ரி 261-ல் மரணித்த மாமேதை பாயஜீது புஸ்தாமீ(ரஹ்) அவர்கள் தம்மைப் பற்றிக் கூறுகிறார்கள்:

நான் மிகவும் அதிகம் வணக்க வழிபாடுகள் செய்து வந்தேன். எனினும் அதில் இன்பத்தைக் காண முடிய வில்லை. எனவே, அதற்குரிய காரண ங்களை பல விதத்தில் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். அதாவது என்னைக் கர்ப்பமுற்ற காலத்தில் என் தாய் சந்தேகத்திற்குரிய பொருட்களில் ஒன்றைச் சாப்பிட்டிருப்பார்களோ என எண்ணி என் தாயிடம் இதைக் கூறினேன்.

ஆம்! ஒரு நாள் உன்னைக் கருவறையில் சுமந்திருந்தபோது இன்ன வீட்டு மாடியில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் உள்ள ஒரு கனியைப் பறித்துச் சாப்பிட்டேன். அதற்குரியவரிடத்தில் அனுமதி வாங்க வில்லை என்றார்கள். பாயஜீது புஸ்தாமீ கூறுகிறார்கள்: என் தாயின் மூலம் அந்த பொருளுக்குரியவரிடத்தில் அதை ஹலாலாக்கிய பின்னர் தான் எனது வணக்கத்தில் இன்பம் ஏற்பட்டது. ஆதாரம்: கல்யூபி, பக்கம்:37

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது. "பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி) நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள். (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203) நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

Aug 23, 2010

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.

சுவர்க்கத்தின் பெயர்கள்:

1. அல் ஜன்னத்
2. தாருஸ் ஸலாம்
3. தாருல் குல்த்
4. தாருல் முகாமத்
5. ஜன்னதுல் மஃவா
6. ஜன்னாத்து அத்ன்
7. தாருல் ஹயவான்
8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
9. ஜன்னாத்துன்னயீம்
10. அல் மகாமுல் அமீன்
11. மக்அது ஸித்க்
12. கதமு ஸித்க்

சுவர்க்க வாசலின் பெயர்கள்

1. பாபு முஹம்மது
2. பாபுத்தவ்பா
3. பாபுஸ்ஸலா
4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)
5. பாபுஸ்ஸகாத்
6. பாபுஸ்ஸதகாத்
7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா
8. பாபுல் ஜிஹாத்

குர்ஆனில் சுவர்க்கம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73

அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும். 44:51 – 57

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் (பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28

இன்னும் இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன் முடிக்கிறேன்.

மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்காது.
(புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும் நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப் படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள்.

அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப் பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும் விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்)
முஸ்லிம்: ஸுஹைபு(ரலி)

Aug 22, 2010

நண்பர்கள் சொல்லி கேட்டது

எதில் நிற்க்கிறோம் என்பதில் உருதியாயிரு...................
எதில் விழுகிறோம் என்பதில் கவனமாயிரு........................

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.................

விவாதத்தால் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது,
ஆனால் விவாதம் இல்லை என்றால் தீர்வு என்பதே கிடையாது.

எழுந்து நின்று பேசுவது மட்டுமல்ல வீரம்...............
பொருமையாக உர்க்காந்து கவனிப்பதும் தான்.

சரியான வழியை தெரிந்து அதில் நட்ப்பவன் மட்டுமல்ல.................... மற்றவர்களுக்கும் அந்த வழியை காட்டுபவனே மனிதன்..........................

நிதானம் இழக்காமல் அமைதியாக இருக்க முயல்வது என்பதும்
நிதானம் இழக்காமல் அமைதியாக இருப்பதும் ஒன்றல்ல!!!

பயம் கதவை தட்டுகிறதா?
தைரியத்தை எழுந்து போய் கதவை திரக்க சொல்லுங்கள்

கல்மனம் படைத்த நண்பர்களை விட
கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல

மனிதனை எது அடிமையாக்குகிறதோ,
அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது

தன்னை அறிந்தவன் ”ஆசை" படமாட்டான்...
உலகை அறிந்தவன் ”கோப" படமாட்டான்....
இதை இரண்டையும் உணர்ந்தவன் ”கஷ்டப்" படமாட்டான்

பணம் மட்டுமே வாழ்வாகி போன இவ்வுலகத்தில்
இன்று நாணயமும் நல்ல குணங்களும் நடை பிணமாய்
மாண்புள்ள மனிதனுக்கு கொடுக்காத மதிப்பை
கேவலம் துப்பு கெட்டு துட்டுக்கு கொடுகிறார்களே !!

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!

அதிகம் பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது
அந்த பணம் உன்னிடம் இல்லையென்றால் உன்னை உலகத்திற்க்கு தெறியாது

நீ என்னிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை

உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு
உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு

Aug 21, 2010

நபியவர்களைச் சாராதவர்கள்

நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், 'இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் பிள்ளையைப் பார்த்து, 'என் பிள்ளையே கிடையாது' என்று கூறுவாரோ அதைப் போன்று சில காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து, 'என்னைச் சார்ந்தவன் இல்லை' என்று கடுமையான வாசகத்தை நபிகளார் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே இவ்வாறு பயன்படுத்தியுள்ள காரியத்தி­ருந்து நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.


திருமணத்தைப் புறக்கணிப்பவன்

இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதற்காகவும், அவனது அருளைப் பெறுவதற்காகவும் சிலர் குடும்பத்தை விட்டு விட்டு, காடுகளில் தவமிருந்து பல அரிய சக்திகளைப் பெற்றதாகப் பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இவ்வாறு துறவறம் இருப்பது இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

மாறாக, திருமணம் முடித்து குடும்பத்தினருடன் வாழ்வதே இறையருளைப் பெற்றுத் தரும் என்றும் இதைப் புறக்கணிப்பவன் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைப் புறக்கணித்தவனாகக் கருதப்படுவான் என்றும் கடுமையாக நபிகளார் எச்சரித்துள்ளார்கள். முழுக்க முழுக்க இறைவன் என்றிருக்காமல் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கüன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), ''முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?'' என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், ''(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன்'' என்றார். இன்னொருவர், ''நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் ''நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கüடம்) வந்து, ''இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர லி), நூல்: புகாரி (5063)

மோசடி செய்பவன்

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பார்ப்பவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள். குறிப்பாக அடிப்படைத் தேவையான உணவுகளில் கலப்படம் செய்து, தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உணவு என்றில்லாமல் எதில் மோசடி செய்வதும் கண்டிப்பாகக் கூடாது. கடுமையான குற்றமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவிய ல் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ''உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அப்போது அவர்கள், ''ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டு விட்டு, ''மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் (164)


சமூகத்தைக் கொன்றழிப்பவன்

தம்மிடையே ஏற்பட்டுள்ள சண்டையின் காரணத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் போர் செய்து, அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்க்காமல் கொன்றழிப்பவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை. இன்று இஸ்லாத்தின் பெயரால் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, நல்லவர்களையும் அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்யும் போக்கை முற்றிலும் கைவிடவேண்டும்.

யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் (3766)

இதே கருத்தில் புகாரியில் மற்றொரு செய்தி இடம் பெற்றுள்ளது.

நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர லி), நூல்: புகாரி (6874)

துன்பத்தின் போது கன்னத்தில் அறைபவன்

மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும் சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூ யைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டுமே தவிர, கன்னங்களில் அடித்துக் கொள்வதும் சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.

(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால (பழக்கங்களுக்காக) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர லி), நூல்: புகாரி (1297)

(என் தந்தை) அபூமூஸா (ர லி) அவர்கள் கடுமையான வேதனையில் மயக்கமடைந்து விட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடி மீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூஸா (ர லி) அவர்களால் அப் பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.

பிறகு மயக்கம் தெளிந்தபோது, ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின் போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூஸா, நூல்: முஸ் லிம் (167)


அநீதிக்கு உதவி செய்பவர்கள்

அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள். மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபிகளார் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை. அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ர லி) நூல்கள்: திர்மிதீ (2185), நஸயீ (4136), அஹ்மத் (17423)


அபகரிப்பவன்

பொருள்களின் மீதுள்ள ஆசையின் காரணத்தால் அடுத்தவர்களின் பொருள்களை அநியாயமாக அபகரித்துக் கொள்ளையடிப்பவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கடுமையான எச்சரிக்கையை நபிகளார் செய்ததுடன், அவன் அவ்வாறு செய்யும் போது முஃமினாக இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்கள்.

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ர லி) நூல்கள்: திர்மிதீ (1042), நஸயீ (3283), இப்னுமாஜா (3927), அஹ்மத் (19136)

ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2475)

மீசையை வெட்டாதவர்

இஸ்லாம் தூய்மையை வ யுறுத்துகிறது. தூய்மையாக இருப்பது ஈமானின் உள்ளடக்கம் என்றும் தெளிவுபடுத்துகிறது. அந்த அடிப்படையில் மீசையை வெட்டிக் கொள்ளுமாறும், இது இயற்கையான சுன்னத் என்றும் போதிக்கிறது. மேலும் மீசையை அதிகமாக வளர்ப்பதன் காரணத்தால், சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் மீசையில் பட்டு அதன் மீது படிந்துள்ள தூசிகளும் சேர்ந்து உடலுக்குள் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இவற்றைத் தவிர்க்கும் விதமாக மீசையை ஒழுங்குற வெட்டிக் கொள்ள வேண்டும்.

யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ர லி), நூல்: திர்மிதீ (2685), நஸயீ (13)

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர லி), நூல்: புகாரி (5888)

குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவன்

கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ளவர்கள் அவர்களின் பிணக்குகளைத் தீர்த்து, அவர்களை சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இல்லாததையும் இருப்பதையும் இணைத்து மனைவியிடம் போட்டுக் கொடுத்து, கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: அபூதாவூத் (1860), அஹ்மத் (8792)

காலத்தே பயிர் செய்


மனிதன் இவ்வுலகத்தில் இறைவனை அறிந்து கொள்ளவும் இறைச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அவனது அறிவுரைகளின் படி நடக்கவும் போதிய காலங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிக் கொண்டு இறைக் கட்டளைகளையும் நற்காரியங்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றான்.

நேரமில்லை என்று சொல்பவர்கள், உண்மையாக இவ்வாறு சொல்கிறார்களா? அல்லது தட்டிக் கழிப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்களா? என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன. நேரமில்லை என்று சொல்பவர்கள் மணிக்கணக்கில் நாடகங்களைப் பார்க்கிறார்கள்; பல மணி நேரம் கிரிக்கெட் பார்க்கிறார்கள்; விடிந்தது கூடத் தெரியாமல் உறங்குகிறார்கள்; நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறார்கள்; சின்னத்திரை, பெரிய திரைகளில் பல மணி நேரம் சினிமா பார்க்கிறார்கள். இப்படி ஏராளமான நேரங்களை வீணடிப்பவர்களுக்கு இறை நினைவுக்கும் அவனது கட்டளைகளை நிறைவேற்றவும் நேரமில்லை என்று கூறுவது உண்மையாக இருக்குமா?

விலை மதிப்பற்ற செல்வமான இந்தக் காலத்தை வீணடிப்பது பெருங்குற்றமாகும். இதற்காகக் கடுமையான தண்டனையை மறுமை நாளில் பெற நேரிடும். தண்டனையி ருந்து தப்பிக்கவும் முடியாது.

''எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். ''படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 35:37)

மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்தும் கருத்து என்ன?

நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள இவ்வுலகில் போதுமான நேரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.

காலத்தை வீணடிக்காமல் இருக்கவும் நல்லறங்களில் ஈடுபடவும் செய்ய வேண்டுமென இறைத்தூதர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

காலத்தை தேவையற்றவற்றில் செலவழிக்கக் கூடாது.

காலத்தை வீணடிப்பது பெருங்குற்றம். அதற்குரிய தண்டனை நரகமே!

மறுமை வந்து விட்டால் அப்போது தண்டனையி ருந்து யாரும் காப்பற்ற உதவி செய்ய முடியாது.

எனவே நமக்கு கிடைத்த நேரங்களை நற்காரியங்களில் பயன்படுத்த வேண்டும். வீணான காரியங்களில் நேரங்களை கழிக்கக் கூடாது. இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஓய்வு நேரமாகும். இவற்றைப் பெரும்பாலும் பலர் வீணடிக்கவே செய்கின்றனர்.

''மனிதர்கüல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம், 2. ஓய்வு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6412)

நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதும், ஓய்வுகள் கிடைக்கும் போதும் நற்காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் முதன்மையான திருக்குர்ஆனை, பார்த்து ஓதும் நிலையையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களுக்கு திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மையாகும். இஸ்லாத்தை ஏற்றுப் பல வருடங்களாக, ஏன் பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தில் இருப்பவர்களுக்கும் திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லையானால் அவர்கள் இஸ்லாத்தின் மீதும் திருக்குர்ஆன் மீதும் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

''குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்கüல் சிறந்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸ்மான் (ர லி) நூற்கள்: புகாரி (5027), திர்மிதி (2832, 2834), அபூதாவூத் (1240), அஹ்மத் (469)

மற்ற மொழிகளைக் கற்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடு முயற்சி செய்தால் கூட திருக்குர்ஆனைக் கற்றிருக்கலாம். ஆனால் அந்த அக்கறை மறுமை வெற்றிக்கு வித்திடும் திருக்குர்ஆனில் யாரும் காட்டுவதில்லை.

இந்த நிலையை இஸ்லாமியர்கள் மாற்றவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் இருக்கவேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் அழகிய முறையில் திருக்குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களாகவும் அதை தினமும் பொருளறிந்து ஓதுபவர்களாகவும் மாற வேண்டும். மறுமை நாளில் கைசேதப்படுவதற்கு முன், கிடைத்த நேரத்தை நற்காரியங்களில் பயன்படுத்துவோம்; மறுமை நாளில் வெற்றி பெறுவோம்.

Aug 20, 2010

யெஸ் மெண் குழுவினர்



நம்பியவர்கள் ஏமாற்றப்படுவார்கள்!

Yes Men? அப்படியென்றால் என்ன? திரைப்படம் போலல்லவா இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். திரைப்படங்களில் செய்யும் அனைத்து ஹீரோயிஸத்தையும் இரு நண்பர்கள் இணைந்து செயல்படுத்தி காட்டி கொண்டிருக்கிறார்கள்.

Andy Bichlbaum, Mike Bonanno இருவரும் The Yes Men குழுவைச் சேர்ந்தவர்கள். உலகின் பணக்கார நிறுவனங்களுக்கு இவர்கள் எதிரிகள். பிபிசி தொடங்கி நியூ யார்க் டைம்ஸ் வரை பல செய்தி நிறுவனங்கள் இவர்களைக் கண்டு அலறியிருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய அசாதாரணமான விஷயங்களை இந்த இருவரும் நிஜ வாழ்வில் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.

எது பிடிக்கவில்லையோ அதுவாக மாறிவிடு என்பதுதான் இவர்களது சித்தாந்தம். புஷ்ஷின் அராஜக ஆட்சி பிடிக்கவில்லை என்பதால் அவர் பெயரில் கிண்டலாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்தார்கள். (www.gwbush.com என்னும் முகவரியில் தொடங்கப்பட்ட அந்தத் தளம் தற்போது உபயோகத்தில் இல்லை.) என்னை அபாண்டமாகவும் அநியாயமாகவும் விமரிசனம் செய்கிறார்கள் என்று புஷ்கூட வருத்தப்பட்டுக்கொண்டார்.
உலக வர்த்தக மையம் செயல்படும் விதம் அதிருப்தி அளித்ததால், அவர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய ஒரு போலி வலைத்தளத்தை ஆரம்பித்து, தாங்கள் விரும்பிய செய்திகளைப் பரப்பினார்கள். பல சர்வதேச அமைப்புகள் அசல் உலக வர்த்தக மையம் என்று நினைத்து இவர்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் நாட்டுக்கு வந்து உரையாற்ற அழைத்தார்கள்.

நவம்பர் 12, 2008 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையை 80,000 பிரதிகள் அச்சிட்டு நியூ யார்க்கிலும் லாஸ் ஏஞ்ஜெலஸிலும் விநியோகித்தார்கள். இராக் யுத்தம் முடிந்துவிட்டது என்பதுதான் தலைப்புச் செய்தி. பத்திரிகையைப் படித்த பலரும் இராக் யுத்தம் நிஜமாகவே முடிந்துவிட்டதாக நம்பினார்கள். பரவாயில்லையே, துணிச்சலாக எழுதுகிறார்களே என்று பலரும் ஆச்சரியமடைந்தார்கள். தேசிய அளவில் மருத்துவச் சேவை மையம் தொடங்கப்போகிறோம் என்றது ஓர் அரசு தரப்பு செய்தி. நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு அதிகபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றது இன்னொரு செய்தி. மற்றொன்றில், ஜார்ஜ் புஷ் தன் தவறுகளைப் பட்டியலிட்டு, நான் குற்றவாளிதான் என்று ஒப்புக்கொண்டிருந்தார்.

1984 போபால் பேரழிவுக்காக,டவ் கெமிக்கல்ஸை பழி தீர்க்க விரும்பினார்கள் யெஸ் மென் இரட்டையர்கள். யூனியன் கார்பைட் நிறுவனத்தை வாங்கிக்கொண்ட டவ் கெமிக்கல்ஸ் பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு நிவாரணம் அளிக்க மறுத்து வந்தது. யூனியன் கார்பைட் செய்த தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது டவ் கெமிக்கல்ஸின் நிலைப்பாடு.

இந்த முறையும் ஊடகத்தையே யெஸ் மென் தமது ஆயுதமாக எடுத்துக்கொண்டது. வழக்கம் போல், டவ் கெமிக்கல்ஸ் பெயரில் ஒரு போலி வலைத்தளத்தைத் தொடங்கினார்கள். டவ் நிறுவனம் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விமரிசனப்பூர்வமான கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. எங்களைத் தொடர்பு கொள்ள ஈமெயில் அனுப்புங்கள் என்று ஒரு சுட்டியையும் திறந்து வைத்தார்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எது அசல் டவ், எது போலி டவ் என்று கண்டுபிடிக்கமுடியாதபடி வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது.

விரித்து வைத்திருந்த வலையில், பிபிசி சிக்கிக்கொள்ளும் என்று யெஸ் மென் எதிர்பார்க்கவில்லை. பிபிசி செய்திப் பிரிவில் இருந்து ஒரு ஈமெயில் வந்திருந்தது. நாங்கள் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பேட்டி எடுக்க விரும்புகிறோம். சம்மதமா? உடனுக்குட்ன் டவ் கெமிக்கல்ஸில் இருந்து பதில் வரும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. பிபிசி உற்சாகமடைந்தது. தேதி குறித்துக்கொண்டார்கள். டிசம்பர் 3, 2004. போபால் சம்பவம் நிகழ்ந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியானதை நினைவூட்டும் தினம். பிபிசி நிறுவனத்தில் இருந்த பலருமேகூட இந்தப் பேட்டியை படபடப்புடன் எதிர்நோக்கியிருந்தனர். மிக முக்கியமான தினத்தில் ஒளிபரப்பாகப் போகும் மிக அரிதான ஒரு பேட்டி அல்லவா?

ஏற்பாடு செய்தபடியே பேட்டி ஒளிபரப்பானது. அது ஒரு நேரடி ஒளிபரப்பு. இரட்டையரில் ஒருவரான Andy Bichlbaum, தன்னை டவ் நிறுவனத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக்கொண்டார்.

சுருக்கப்பட்ட வடிவம் கீழே.

பிபிசி : வணக்கம், டவ் கெமிக்கல்ஸ் சார்பாக Jude Finisterra என்பவர் இன்று நம்முடன் பாரீசில் இருந்து உரையாற்றவிருக்கிறார். யூனியன் கார்பைட் நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் டேக் ஓவர் செய்துள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். வணக்கம், மிஸ்டர் ஜூட். உங்களுக்கு எங்கள் காலை வணக்கம். போபால் விவகாரத்துக்கு இப்போதாவது நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா?

ஜூட் : ஆம், பொறுப்பேற்கிறோம். டவ்வில் எங்கள் அனைவருக்கும் இன்று ஒரு முக்கிய தினம். உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கும் இன்று ஒரு முக்கியமான தினம். பேரழிவு நடந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், இன்றாவது அதற்காகப் பொறுப்பேற்றுக்கொள்கிறோமே என்னும் வகையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

12 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு திட்த்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட 1,20,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிவாரண உதவி வழங்கவிருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் 500 டாலருக்கு மேல் கிடைக்கும்படி செய்துள்ளோம். இது நிச்சயம் போதுமானதாக இருக்காது என்று தெரியும். இன்னும் சொல்லப்போனால், ஓராண்டுக்கான சிகிச்சை செலவுதான் இது. வேறு திட்டம் மூலமாக அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

தவிரவும், யூனியன் கார்பைட் போபாலைவிட்டு அகன்றபோது, டன் கணக்கில் விஷக் குப்பைகளை விட்டுச் சென்றனர். குழந்தைகள் இன்னமும் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பகுதி நிலத்தடி நீரை மக்கள் இன்னமும் பருகிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் போபால் பகுதியைச் சுத்தமாக்கப்போகிறோம்.

பிபிசி : ஓ, இது நிஜமாகவே மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்திதான் ஜூட்.

ஜூட் : அது எங்கள் கடமையல்லவா?

பிபிசி : அப்படியானால், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சட்டப்பூர்வமாக நடந்து வரும் வழக்குகளைச் சந்திக்கவும் நீங்கள் தயாரா?

ஜூட் : நிச்சயமாக. அது மட்டுமல்ல, வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றவேண்டும் என்றும் அரசாங்கத்தைக் கேட்கப்போகிறோம். மேலும், யூனியன் கார்பைட் மேற்கொண்ட ரசாயன ஆய்வுகள் குறித்த விவரத்தையும் முழுவதுமாக வெளியிடப்போகிறோம்.

டவ் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள். நீண்ட கால நோக்கில் அவை அழிவை ஏற்படுத்தக்கூடியவை என்று கணிக்கிறார்கள். இது குறித்து ஆய்வுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.

பிபிசி : ஓ, இத்துடன் இந்த உரையாடலை நிறுத்திக்கொள்ளலாம். எங்களுடன் கலந்துகொண்டு உரையாடியதற்கு மிக்க நன்றி ஜூட்.
ஜூட் : நன்றி.

அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு இந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தார்கள். எழுத்தில், பேச்சில், உரையாடலில் இந்தச் செய்தி தீயாகப் பரவிக்கொண்டிருந்தது. மூன்று மணி நேரங்களில், டவ் கெமிக்கல்ஸின் பங்கு 4.2 சதவீதம் இறங்கி, 2 பில்லியன் டாலர் இழப்பானது.

பின்னரே, பிபிசி விழித்துக்கொண்டது. தவறுக்கு வருந்துகிறோம், இப்போது ஒளிபரப்பான செய்தி உண்மையானதல்ல. யாரோ ஒருவர் உள்ளே புகுந்து ஏமாற்றியிருக்கிறார்கள். நாங்களும் ஏமாந்துவிட்டோம். விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். டவ் நிறுவனம், தயவு செய்து மன்னிக்கவும்.

நான்கு தினங்கள் கழித்து Democracy Now இணைய இதழுக்காக, ஆமி குட்மேன் என்பவருக்குப் பேட்டி அளித்தார் 'ஜூட்'.

'தெளிவான திட்டங்களுடன் இந்த நாடகத்தை நடத்தினோம். பேட்டி ஒளிபரப்பாகும் ஒவ்வொரு விநாடியும், இது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். பிபிசியோ டவ் நிறுவனமோ சுதாரித்துக்கொண்டுவிடும் என்று எதிர்பார்த்தேன். கட், கட் என்று எந்நேரமும் கத்திரி போடுவார்கள் என்று நினைத்தேன். பேட்டி முழுவதுமாக ஒளிபரப்பானதோடு மட்டுமல்லாமல், ராய்டர்ஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் இந்தச் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சென்றன.'

தி யெஸ் மென் அரங்கேற்றிய நாடகம் இத்துடன் முடியவில்லை.

பிபிசி வெளியிட்ட மறுப்பைத் தொடர்ந்து, டவ் நிறுவனத்தின் சார்பாக, இரட்டையர்கள் இன்னொரு அதிகாரபூர்வமான அறிவிப்பை டவ் லெட்டர் ஹெட்டில் வெளியிட்டார்கள்.

'இன்று காலை பிபிசியில் ஒளிபரப்பான செய்தி தவறு. பேட்டியளித்தவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அந்தப் பெயரில் எந்தவொரு நபரும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றவில்லை. டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றாலும், சம்பவம் நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தாது. செலவு அதிகம் ஆகாது என்றாலும் அதைச் செய்ய நாங்கள் தயாராக இல்லை. நிவாரணத் தொகை தலைக்கு 500 டாலர் மட்டுமே. இந்தியர்களுக்கு இது அதிகம்தான்.'

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி சென்று சேர்ந்தது. யாரும் சந்தேகிக்கவில்லை. டவ் நிறுவனத்தின் மறுப்பு என்னும் த்லைப்பில் இந்த அறிக்கை மறு நாள் உலா வந்தது. கூகிளின் டாப் தேடலில் இது முதலிடம் பெற்றது.

தி யெஸ் மென் இரட்டையர்களுக்கு இரட்டை வெற்றி. முதல் செய்தியில், டவ் நிறுவனம் போபால் பேரழிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. இரண்டாவது செய்தியில், குற்றத்தை ஒப்புக்கொண்டது. ஆனால், நிவாரணம் அளிக்கமுடியாது, விபத்து நடந்த இடத்தைச் சுத்தப்படுத்தமுடியாது என்று மறுப்பு வெளியிட்டது.

ஆனாலும், இருவருக்கும் ஒரு வருத்தம். 'இந்தச் செய்தி உண்மை என்று எண்ணி இரண்டு மணி நேரங்கள் போபால் மக்கள் கனவு கண்டிருப்பார்கள். அது வருத்தமளிக்கிறது. ஆனால், இருபது ஆண்டுகளாக அவர்கள் கண்டு வரும் நிறைவேறாத கனவுடன் ஒப்பிடும்போது இது சிறியதாகிவிடுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். டவ் மேற்கொண்டு எந்தவிதமான உதவியையும் யாருக்கும் செய்யப்போவதில்லை. அவர்களை யார் நம்பினாலும் அவர்கள் ஏமாற்றப்படுவார்கள்.'

நன்றி: மருதன் இணையதளம்

http://marudhang.blogspot.com/2010/07/blog-post_12.html

எது எப்படியோ மறைத்து மூடி வைத்திருந்த போபால் ரகசியம் யெஸ் மெண் குழுமத்தினால் உலகறிந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஆதரவாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
Posted by ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) at 17:41

பாவத்தை கழுவும் தொழுகை


''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கி ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45)


இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல் த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50

நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான்.

மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது....

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். அல்குர்ஆன் 87:14, 15

பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.

''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர ) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160

சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது.

தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)

தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்தி ருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.

பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவி ருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)

இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)

இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது, ''நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)

அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூ கள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களி­ருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)

இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.

இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378

தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

இன்றைய சூழலில் முஸ்லீம் பெண்கள்



தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் மனதிற்கு கவலை அளிக்கின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நடந்து வரும் முஸ்லீம்களே முஸ்லீம்களை அழிக்க நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. தென் மாவட்டங்களில் (தூத்துக்குடியில் சிறுவன் கழுத்தறுத்துக் கொலை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பாலியல் சம்பவங்கள்) சமீப காலத்தில் கடன் சம்பந்தமாக இருவேறு சகோதரிகள் சீரழிக்கப்பட்டு, வீடியோ படம் எடுத்து மிரட்டக்கூடிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. அரசியல் பலம், அதிகார பலம், அடியாள் பலம், காவல்துறை பலம் என்று பலவிதமான பலங்களைக் கொண்டும் இந்த வேலையை செய்யும் அக்கிரமக்காரர்கள் எந்த செயலை செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கூச்சப்படும் சந்தர்ப்பத்தை பயண்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர்.
இதற்கான காரணமும், இதற்கான தீர்வும் எண்ண என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் சங்க் பரிவார்களிடமும் இருந்தும், காவி மனிதர்களிடமிருந்தும் நம் முஸ்லீம் பெண்களை காக்க வேண்டும் என்று நம் சமுதாய வாலிபர்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில இடங்களில் நம் சமுதாய மக்களே இப்படிப்பட்ட வக்கர வேலைகளில் ஈடுபடுவது நம் சமுதாய மக்களுக்கும், நம் சமுதாய வளர்ச்சிக்கும், நம் மார்க்க வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானது அல்ல என்பதை மட்டும் இந்த வேளையில் கூறிக் கொள்கிறேன்.

ஆடம்பர வாழ்வும், திட்டமிடாமல் வாழ்வதும், பகட்டிற்காக அதிக கடனை வாங்குவதும், தவணை முறை என்பதால் இலகுவாக பொருட்களை வீட்டிற்குள் சேர்த்து விடலாம் என்ற காரணத்தினாலும் சில பெண்கள் கடன் வாங்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில நேரங்களில் வட்டி கொடுக்க முடியாமலும், சில நேரங்களில் முழுத் தொகை கேட்டு கொடுக்க முடியாமலும் இருக்கும் சூழ்நிலையை மனதில் வைத்துக் கொண்டு பெண்களை பாலியல் கொடூரம் செய்யும் வக்கிர புத்திக்காரர்கள் அதிகமதிகம் காணக்கிடக்கின்றனர்.

என்ன செய்யலாம்:

இதனால் நாம் எல்லோரும் கடனே இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று சொல்லவில்லை. ஆனால் திட்டமிடுகின்ற வாழ்க்கையும், கடன் அடைக்கூடிய சூழ்நிலை இருந்தால் மட்டும் கடன் வாங்குதல் போன்ற தகுந்த முன்னேற்பட்டால் இதை போன்ற வக்கிரக்காரர்களிடமிருந்து நாம் நம்மையும் நம் சமுதாயத்தையும் காத்துக் கொள்ளலாம். தவிர வட்டிக்கு கடன் வாங்கும் போக்கை தயவு கூர்ந்து நம் சமுதாய மக்கள் கைவிட வேண்டும், சிலர் ஊரில் வட்டிக்கு கடன் வாங்கினால் தான் பாவம், அரபு நாடுகளிலுள்ள வங்கிகளில் loan (அதற்கு பெயரும் வட்டிக்கு கடன் தான்) எடுத்தால் பெரிய தவறு ஒன்றும் இல்லை, இந்த காலத்தில் loan எடுக்காமல் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுமளவிற்கு சென்று விட்டார்கள்.

இது தவிர வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். .அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் உங்கள் குடும்பத்து பெண்களிடம் கூறுங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள். அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

மார்க்கத்தில் சொல்லப்பட்ட மஹரமான ஆண்களிடம் மட்டுமே பெண்கள் ஹிஜாப் இல்லாமல் பேச வேண்டும் என்பதையும் எக்காரணம் கொண்டும் அந்நிய ஆண்களை தங்கள் வீட்டிற்கு தனியாக இருக்கும் நேரங்களில் எந்த வேலையாக இருந்தாலும் அனுமதிக்க கூடாது என்பதையும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் சொல்லி புரிய வையுங்கள். பல இடங்களில், மாற்றுமத சகோதரர்கள் நம் முஸ்லீம் சமுதாய வீடுகளுக்கு சாதாரணமாக வந்து போவதும், கொடுக்கல் வாங்கலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆண்கள் இல்லாத வீடுகளாக இருந்தால், இதற்கு நாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் இலலாவிட்டால் விபரீதம் என்று அறியும் முன்பே சில சம்பவங்கள் நடந்து முடிந்து விடும்.

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆன்: 24:37)

''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)

சமீபத்தில் என்னிடம் பேசிய சென்னை நண்பர் கூறியது: வரக்கூடிய காலங்களில் பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்பது பெரிய போராட்டமாகி விடும் போல இருக்கிறது, அந்தளவுக்கு மிகவும் நிலைமை மோசமாக இருக்கிறது என்றார். இது நகர வாழ்க்கையில் தான் என்றால் சில கிராம பென்களும் நாங்கள் இதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பது போல் வாழ்ந்து காட்டுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் சமுதாயம் அலட்சியமாக விட்டால் புற்று நோய் போல பரவி நம் சமுதாயத்தின் நிலைமையை சீர்குலைத்து விடும் என்பதில் சமூக ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும், சமுதாய கண்மனிகளும் கவனம் கொள்க.

இதை போன்ற செயல்களால் மாற்று மத நண்பர்களிடமும் செய்யும் தாவா பணிகளும் பாதிக்கப்படுகிறது என்பது கூடுதல் செய்தி

தோழமையுடன்

அபு நிஹான்
Posted b

பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுதல்



ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதி ருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995

குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.

பல குழந்தைகளைப் பெற்றெடுத்து பண வசதியின்மையால் மிகப்பெரும் சிரமத்திற்கு ஆளவோர் இந்தியாவில் பெருமளவில் இருக்கின்றனர். குழந்தைகளை சரி வர வளர்க்க முடியாமல் படிக்க வைக்க முடியாமல் திணறும் பெற்றோர்கள், கடன் சுமை அதிகரித்து, தற்கொலை என்ற மாபாதகமான செயல்களுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் நிரந்தர நரகத்திற்குச் செல்லும் அவல நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.


குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்று விட்டால் பெற்றார்களுக்குப் பெரும் சிரம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்து திருமணமும் செய்து வைப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகப் பெரிய சிரமமாகப் பலர் கருதுகின்றனர்.

இன்னலாகக் கருதப்படும் இந்தப் பெண் குழந்தைகள், இவ்வுலகில் பாரமாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்த்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வளர்ப்பதில் சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நாம் செய்யும் இந்தக் காரியத்துக்குக் கைமாறாக மறுமை நாளில் இந்தக் குழந்தைகள் நம்மை நரகத்திற்குப் போக விடாமல் தடுக்கும் திரையாக இருந்து சொர்க்கத்திற்கு அனுப்புபவர்களாக மாறுவார்கள். இக்கருத்தைத் தான் மேற்கூறிய நபிமொழி எடுத்துரைக்கிறது.

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள். இவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கன்னிப் பெண்ணை திருமணம் செய்யாமல் விதவைப் பெண்ணை திருமணம் செய்தார்கள். விதவைப் பெண்ணுக்கு அனுபவம் இருக்கும். தம் சகோதரிகளை நல்ல முறையில் பராமரிப்பார், ஒழுக்கம் கற்பிப்பார் என்ற நம்பிக்கையில் கன்னிப் பெண்ணை விட்டுவிட்டு விதவைப் பெண்ணை தேர்வு செய்தார்கள். இதை நபிகளார் அவர்களும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புகாரி 4052, 5367, 2967)

அறியாமைக் காலத்தில் தான் பெண் குழந்தைகள் பிறப்பது கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களை உயிருடன் புதைக்கும் கொடுமையும் நிழந்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி ருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

இவ்வாறு பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தவர்கள் மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனை பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81:8,9)

பெண் பிள்ளைகளை பிறப்பதை விரும்பாதவர்களையும் அவர்களை உயிருடன் புதைத்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கும் இஸ்லாம், சிரமங்களை ஏற்று, பெண் குழந்தைகளை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்தால் நிச்சயம் அந்தப் பெற்றோருக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறுகிறது. எனவே பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவலையை மறந்து, நமது இந்தக் குழந்தைகள் மறுமை வெற்றியின் படிக்கற்கள் என்பதை நம்பி அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

Aug 18, 2010

சிரித்து வாழ வேண்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
"இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்'
என்று போதித்திருக்கிறார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியார் நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், ""அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். "


"இறைத்தூதரே! எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகிறது. பயணம் செய்வதற்கென எனக்கு ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் சிரமப்படுகிறேன்,'' என்றார்.

அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம் (ஸல்) அவர்கள், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள்.

அந்த மூதாட்டி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார்.

""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண் ஜாடை காட்டினார்கள்.

சற்று நேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.

""நாயகமே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும்,

நாயகம் சிரித்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்.

இதைக் கேட்ட அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார்.

மனிதர்கள் சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இது புதுசுங்க. நோன்பும் சில முதல் உதவிகளும்.

நோன்பு வசந்த காலத்தின் வாயிற்படி!

-டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)


வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம்.

ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும். இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.

குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை.

அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும்.

ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான்.

அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு.

பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம்.

ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது.

இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது.

வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது.

அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும்.

பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும்.

வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும்.

வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.



வயிற்று உபாதைகள்: தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

(கட்டுரையாளருடன் தொடர்புக்கு:

ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA

அடிமையாகி விடாதீர்கள். பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFCகளுக்கு.



பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகை ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்.


மெக்டொனால்ட்ஸ் - இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பேர்கர், கோழி இறைச்சி உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் கிடைக்கும். இந்த உணவுச்சாலையின் உணவுகள் பலராலும், குறிப்பாக சிறுவர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். மெக்டொனால்ட்ஸ் உணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை. (Source : wikipedia)


உதாரணமாக, 25 வயது ஆரோக்கியமுள்ள ஆணுக்கு (சராசரி தினசரி வாழ்க்கையில்) ஒரு நாளைக்கு 2400 கலோரி உணவு தேவை, ஒவ்வொரு நாளுக்கும் அவர் 500 கலோரி அதிகமாக உணவு அருந்தினால், சில மாதங்களிலேயே "அதிக எடை" குழுவிற்கு வந்துவிடுவார், ஆண்டுகள் கடப்பதற்குள் அவர் "அதிக உடற்பருமன்" நிலைக்கு வந்துவிடுவார், அத்துடன் தேவையில்லாத பல நோய்களையும் சேர்த்துக் கொண்டிருப்பார். மெக்டொனால்ட்ஸ் மற்றும் பெரும்பாலான உணவகங்களில் அவர் தினசரி உணவு அருந்தும் கட்டாயம் இருந்தால், தேவைக்கு அதிகமான கலோரி உண்ணும் நிலையிலிருந்து அவரால் தப்ப இயலாது. பெரும்பாலான வீட்டு உணவுகளுக்கும் வியாபார உணவக உணவுக்குமுள்ள பெரும் வித்தியாசம் இந்த அளவுக்கதிகமான கலோரி உணவுதான்.


வீட்டில் சமைத்து உண்பது என்பது பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கும் குதிரைக் கொம்பு போல, பெரும்பான்மையான குடும்பங்களின் உணவுக்கான மாதாந்திரச் செலவில் 40% க்கு மேல் வெளியே உண்பதற்காக செலவு செய்யப்படுகிறது.

மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்ற உணவுத் தொடர்களும் மற்ற பல பெரும் உணவகங்களும் பரிமாறும் உணவு வகைகளில் மிகப் பெரும்பான்மையானவை அளவுக்கதிகமான கலோரி கொண்டுள்ளதால், வெளியே உண்ணும் அமெரிக்கர்களுக்கு உடற்பருமனும், உப்புசமும் அது சார்ந்த பல நோய்களும் கடந்த இருபதாண்டுகளில் அதிகரித்துள்ளது.

மொத்த அமெரிக்க மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பங்கானவர்களின் உடல் எடை அவர்களின் உடல் அமைப்புத் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அமெரிக்க மருத்துவ உலகமும், அரசு உடல்நல நிறுமங்களும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.இந்த விழிப்புணர்வின் தொடர்பாக, பல்வேறு தன்னார்வ இயக்கங்களும், சூழல் ஆர்வலர்களும் அனைத்து உணவகங்களிலும் பரிமாறப்படும் உணவின் கலோரி அளவினைத் தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.


2004ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விவரணப்படம் "சூப்பர் சைஸ் மீ" (Super Size Me!), மெக்டொனால்ட்ஸ் போன்ற பெரும் உணவகங்களில் விற்கப்படும் அளவுக்கு அதிக கலோரியுடைய உணவினால் ஏற்படும் உடற்கேடுகளையும், அந்த உணவகங்களின் வியாபார நோக்கினால் மக்களுக்கு ஏற்படும் உடற்பருமன் தொடர்பான பிரச்சினைகளையும் மக்களிடையேயும் ஊடகங்களிடையேயும் கொண்டு சென்றது. (Source : http://nallathunadakattum.blogspot.com/2008/04/blog-post.html)

நமது வயிற்றுப் பதியை கெடுப்பதற்காக நாம் உண்ணும் உணவில் இயற்கைத்தன்மையை அழித்து சுவைபோல தோன்றும் மெக்டொனால்ட்ஸ், KFC போன்ற செயற்கை உணவுகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றனர்.

இவ்வகை உணவுகளில் இஸ்லாம் தடைசெய்தவைகள் வேண்டுமென்றே கலக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் ஒருவர் பருமந்தனம் (Obesity) நோய்களால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

மெக்டொனால்ட்ஸ், KFC முதல் பெப்ஸி, கொக்காகோலா வரையுள்ள இத்தகைய உணவுகளுக்கு அரபு முஸ்லிம் உலகமே அடியாகிவிட்ட நிலையை அங்குள்ளவர்கள் அறிந்தேயிருப்பர்.

மேற்கண்ட உணவு வகைகள் அமெரிக்க பிரிட்டானிய தயாரிப்புகளாக இருப்பினும் அரபுநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கின்ற விற்பனையில்தான் அந்நிறுவனங்கள் கொள்ளை இலாபம் அடைந்து கொண்டிருப்பது உண்மையிலும் உண்மை.

எனவே இஸ்லாமிய இளைஞர்களே, யுவதிகளே!

பாஸ்புட், பேஸன்புட் என்ற பெயரால் உங்கள் உடலுக்கு சேரவேண்டிய சக்தியை இழந்துவிடாதீர்கள்.

உங்கள் தாய்மார்கள், உங்கள் மனைவியர், வீட்டில் தாயாரிக்கும் உணவு இத்தகைய கலப்பின உணவுகளை விட பலமடங்கு தரமானது, சக்திமிக்கது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பெப்ஸி, கொக்காகோலாவிற்கும் மெக்டொனால்டஸ், KFC போன்ற உணவு வகைகளுக்கு ஒருபோதும் அடிமையாகி விடாதீர்கள்.

"ஒரு பலம்குன்றிய முஃமினைவிட பலமாக முஃமின் சிறந்தவனாவான்" என்ற நபிமொழிக்கொப்ப இந்த தஜ்ஜாலிய, ஷைத்தானியக் கூட்டத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் நீங்கள் வெற்றிபெற வேண்டுமென்றால், ஆரோக்கியமும் சக்தியும் உங்களுக்கு மிகமிக அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள தொடுப்பிலுள்ள வீடியோ படங்களை பார்க்கவும்.

http://www.ottrumai.net/Phase-3/index.htm
THANKS TO SOURCE: http://www.ottrumai.net