இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

May 23, 2011

பெண்ணே, முக்காடு என்பது


அஸ்ஸலாமு அலைக்கும் ...



பெண்ணே, முக்காடு என்பது உனக்காக, உன் பாதுகாப்புக்காக என்பதை நீ உணராத போது நீ ஏன் பிறருக்காக முக்காடு போடுகிறாய். அது உனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள கொடை என்று நீ அறியாத வரை அதை போடாதே என சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் உணர்ந்து போடு என்று கூறத்தான் ஆசைப்படுகிறேன்“

உயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில்

சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள்.கற்களையோ ,கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, நீங்கள் வைரம் என்றால் முக்காடு இடுங்கள். இல்லை..இல்லை… நாங்கள் கூலாங்கற்கள் என்றால்… சகோதரிகளே நீங்கள் வைரமா ??? கூலாங்கற்களா !!!! “





நபியே நீர், உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமீன் பெண்களுக்கும், அவர்கள் தங்களுடைய தலை முந்தானைகளை இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால் [கண்ணியமானவர்கள் என] அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். [சூரா அல் அஹ்ஜாப் :59]

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை (அணிந்திருந்தனர் அது கண்ட) நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு ‘அஸ்மாவே’ நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது’ என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: அபூதாவூத்

முக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.



1.பார்த்தால் முக்காடு

இக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே! முக்காடு உங்களுக்கா!? மற்றவர்களுக்கா!? முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா!? மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா !!!



2.கிராமிய முக்காடு

முஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன்!? முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா!?





3.கிழடு கட்டை முக்காடு

இக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு (!) ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது!



4.சீருடை முக்காடு (Uniform)

இது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா!?



5.சவுதி முக்காடு

இவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன்? மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ?



6.ஏர்போர்ட் முக்காடு

இது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த

வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.

இப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம்.

முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஒளிவு மறைவு அற்ற சுதந்திரமாக வாழும் நாடுகளில் ஒழுக்க கேடுகளின் பட்டியலை எழுதினால் அது நீண்டு கொண்டே போகும்.

கல்யாணமில்லா குடும்பங்கள், தகப்பன் இல்லா குழந்தைகள், தகப்பன் பெயர் அல்லா முகமறியாத குழந்தைகள், பாசத்திற்கு அழும் குழந்தைகள், பிஞ்சிலே பழுத்த கிழங்கள், மணமாவதற்கு முன்பே குடும்ப உறவு காதல் பெயரில், முதியோர் இல்லங்கள் இப்படி எத்தனை எத்தனையோ…..

முக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.!?

படித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.



நன்றி அபு முஹம்மத்..... சிங்கப்பூர்

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் ஆண்கள் ஓரளவு விழிப்புணர்வுடன் குரான் ஹதீஸ் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்து கொண்டு வருகிறார்கள் . ஆனால் சகோதரிகளே நம்மில் சிலரை தவிர பலரின் நிலைமையை சற்று சிந்த்தித்து பாருங்கள் .....

அல்லாஹ் போதுமானவன் .....

நன்றி கெட்டவனாக மனிதன் ..!!

அஸ்ஸலாமு அலைக்கும்....

படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து பணத்தின் மீதும், பதவியின் மீதும், கல்வியின் மீதும், தம் அறிவின் மீதும், தாங்கள் செய்யும் வியாபாரத்தின் மீதும், சொத்துகளின் மீதும் நம்பிக்கை வைக்கிறான் மனிதன். தன் பிடரி நரம்பினும் அண்மையிலுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்தவனாக நன்றி கெட்டவனாக மனிதன் வாழ்வதில் இன்பம் காணுகிறான்.


(மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

அல்குரான் - 50 : 16 )

தன்கையில் இலட்ச இலட்சமாக பணம் உள்ளவன் தன்னால் தான் விரும்பியதை செய்ய இயலும் என இறுமாப்புக் கொள்கிறான். மேலும் பணமில்லாத தன் உடன் பிறந்தவர்களையே ஏளனமாக நோக்குகிறான். அவனுடைய ஏழ்மையின் காரணமாக அவன் வாழும் நெறியான வாழ்க்கை மீதே வீண் பழி சுமத்தவும் அஞ்சுவதில்லை. காரணம் தன்னிடம் உள்ள பணம் தன்னைக் காப்பாற்றும் மிகப்பெரிய சக்தியாக அவன் எண்ணுவதுதான்.


அடுத்து பதவியின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கை தன்னுடைய பதவியை எதனையும் சாதிக்கக்கூடிய, நினைத்ததை முடிக்கக்கூடிய அதிகாரம் படைத்ததாகக் கருதி செயல்படுகிறான்.

மேலும் கல்வியின் மீது கொண்ட நம்பிக்கையானது கல்வி கற்காதவர்களையும் அறிவற்றவர்களாக தகுதியில்லாதவர்களாக எண்ணும் அளவுக்கு ‘அறிவின் ஆணவம்’ போய்க் கொண்டிருக்கிறது. இவ்வாறாக வியாபரத்தின் மீது கொண்ட நம்பிக்கையும் மனிதனை இறை நம்பிக்கையற்றவனாக ஆக்குகின்றது. தன் வியாபாரம் எக்காலத்துக்கும் கைகொடுக்கும், மங்காத மறையாத செல்வம் அதன் மூலம் தொடர்ந்து கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கின்றான்.


சொத்துக்களின் மீதும் மனிதன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவனாக இருக்கின்றான். தம்முடைய இந்தச் சொத்து ஐந்தாறு தலைமுறைகளுக்குத் தேறும், எவரும் தன்னை அசைக்கக் கூட இயலாது என எண்ணுகிறான்.

இஸ்லாம் மனிதனுக்குள்ள பணத்தேவையையும், அதை ஈட்டுவதின் வழி முறைகளையும், கல்வியின் அவசியத்தையும், அறிவின் மூலம் ஏற்படுகின்ற சிந்தனை ஊற்றையும் கொடுக்கல் வாங்கல் முதலான வியாபரங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும், சொத்துக்களின் பங்கீடு முறை பற்றியும் தெளிவாக எடுத்து கூறுகின்றது.


இல்லறத்தின் மூலம் நல்லறங்களைச் செய்யவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. காவி உடை தரித்து கமண்டலம் ஏந்தி காட்டுக்குச் சென்று தவம் செய்து ஞானி எனப்பெயர் பெறுவதே சிறந்ததது என்று இஸ்லாம் ஒரு போதும் சொன்னதில்லை. எந்த காரியத்திலும், எந்தச் செயலிலும் இறை நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் மானிட இனத்துக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில்


நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். (8:64)


நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான். (100:6-8)


காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (103:1-3)



குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். (104:1-9)


செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது – நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை. (102:1-2)


அல்லாஹ்வின் நல்லடியார்களே! நீங்கள் பொருளைத் தேடுங்கள்; செலவழியுங்கள்; நெறி பிறழாமல் இன்பம் காணுங்கள்! ஆனால் இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள்! கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் மேலும் உங்கள் அறிவினை விரிவாக்கக் கூடிய கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் இறை நம்பிக்கையுடன் அறிவைப் பெற முயலுங்கள்.

வியாபாரம் செய்யுங்கள். மாட மாளிகைகள் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், அப்போதும் எப்போதும் இறை நம்பிக்கையுள்ளவர்களாகத் திகழ்ந்து வாருங்கள். அல்லாஹ் நம்மனைவோர்க்கும் தனது பரந்து பட்ட அருளை இடைவிடாது அளிப்பானாக! (ஆமீன்)



நன்றி - புலவர் செ.ஜஃபர் அலீ