இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Jan 10, 2011

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !

பலருக்கும் ஒரு வேலை வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும். வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.

சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ?

1. வேலை கிடைத்ததும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இது தான் ஆரம்பமே. உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிப்பது தான் முக்கியம். புதிதாக வேலைக்குச் சென்றிருக்கும் உங்களை எல்லாக் கண்களும் ரகசியமாய்க் கண்காணிக்கும். எனவே வேலையில் கருத்தாய் இருங்கள்.

2. உங்கள் வேலைக்குத் தேவையான தகவல்களைக் கற்பதில் தயக்கம் காட்டாதீர்கள். அலுவலகத்தில் கடை நிலை ஊழியனிடம் கூட விவரங்கள் கேட்டுப் பெறலாம். முதல் சில மாதங்கள் மட்டும் தான் மற்றவர்களிடம் நிறைய விஷயங்கள் கேட்க முடியும். ரொம்ப நாளுக்கு அப்புறம் கேட்டால் “இன்னுமா இதெல்லாம் தெரியல” என ஏளனமாய்ப் பார்ப்பார்கள்.

3. அடுத்தவர்களுடைய வேலையைப் பங்கு போட்டுக் கொள்வதில் தயக்கம் வேண்டாம். வேலையை முடித்தோமா, கிளம்பினோமா என்று இருந்தால் கேரியர் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருக்கும். சகல கலா வல்லவன் ஆகவேண்டுமென்றால் அடுத்தவர் செய்யும் வேலைகளெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

4. நிலமையை முன்கூட்டியே கணிக்கப் பழகுங்கள். ஒரு வேலை என்றால் அதைக் கேட்டுச் செய்யும் மனநிலை உருவாக வேண்டும். எங்கேனும் பிரச்சினை வரலாம் என்றால் அதையும் ஊகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த “புரோ ஆக்டிவ்” தன்மை உங்களை வேலையில் மிக விரைவாய் வளர வைக்கும்.

5. தயங்காமல் பேசுங்கள். சில சிறு சிறு ஐடியாக்களை எடுத்து விடுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் கவலை வேண்டாம். பத்து வருஷமா இப்படியே தான் ஓடுது, அதையே ஓட்டுவோம் என நினைக்காதீர்கள். அதில் சிறு மாற்றம் செய்ய முடியுமா என பாருங்கள். இவை உங்கள் அதிகாரிகளின் கவனத்தைக் கவரும்.

6. உங்கள் மேலதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதில் தெளிவு கொள்ளுங்கள். அதை அவரிடமே பேசி சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை மேலதிகாரியிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லையேல் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை மேலதிகாரியோடு விவாதியுங்கள். சில மாதங்களுக்கு ஒருமுறை நீங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்பதை விசாரித்து அறியுங்கள்.

7. தவறுகள் செய்யாமல் இருக்கவே முடியாது. தவறு செய்யும்போது தவறை மறைக்காதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன்னியுங்கள். பின் அந்தத் தவற்றை ஒப்புக்கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அந்த தவறை மற்றவர்களும் செய்யாமல் இருக்க ஏதேனும் வழிமுறை செய்ய முடியுமா என பாசிடிவ் ஆக யோசியுங்கள்.

8. நீங்கள் செய்யும் வேலைகளுக்கான கிரடிட் உங்களுக்கு வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரியிடம் அடிக்கடி உரையாடுவது. அன்றைய பணிகள் குறித்த சுருக்கமான ஸ்டேட்டஸ் அனுப்புவது, இப்படி மேலதிகாரியுடன் எப்போதுமே தொடர்பில் இருங்கள்.

9. ஒரு சிக்கல் வந்ததும் சிணுங்கிக் கொண்டே மேலதிகாரியின் கதவைத் தட்டாதீர்கள். அது உங்கள் மேலான அபிமானத்தைக் குறைக்கும். ஒரு சிக்கல் வந்தால் அதை தீர்க்கும் வழிகளை யோசியுங்கள். உங்களால் தீர்க்க முடியாத சிக்கல் என்றால் மேலதிகாரியைப் பாருங்கள். அவரைப் பார்க்கும் போது, இது தான் சிக்கல். இதற்கு இப்படியெல்லாம் தீர்வு உண்டு. என தீர்வுகளுடன் பேசுங்கள். மேலதிகாரியின் மனதில் மேலான இடம் பிடித்து விடுவீர்கள்.

10. கல்லூரி காலமெல்லாம் முடிந்து விட்டது என்பதை வேலைக்குச் செல்லும் போது நினைவில் கொள்ளவேண்டும். நல்ல தூய்மையான, நேர்த்தியான ஆடை உங்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

11, அலுவலகத்தில் எல்லோரிடமும் சகஜமாகப் பேசுங்கள். மேலதிகாரி உங்களிடம் சொல்லும் விஷயத்தை டமாரம் அடிக்காதீர்கள். ஆரோக்கியமான அலுவல் சூழல் மன அழுத்தங்களுக்கெல்லாம் வடிகாலாகும்.

12. நேரம் – தரம் – விலை இந்த மூன்றும் எப்போதும் உங்கள் சிந்தனையில் இருக்க வேண்டும். செய்ய வேண்டிய வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத தரத்தில் அதைச் செய்து முடிக்க வேண்டும், குறைந்த செலவில் அதைச் செய்து முடிக்க வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளும் தான் பணியின் வெற்றியின் ரகசியம்

13. சக பணியாளரைப் பற்றி புறணி பேசுவதையெல்லாம் அடியோடு ஒதுக்குங்கள். உங்கள் பெயர் ஒரேயடியாகப் பாழாகிவிடும். எல்லோரையும் மதித்து, எல்லோரிடமும் நேர்மையாய் இருங்கள். சிலர் ஜால்ராவுக்காக பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்வார்கள். அவர்கள் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள். நேர்மையாய் இருந்தால் மேலதிகாரியின் மனதில் காலம் தாழ்த்தியானாலும் நிரந்தர இடம் நிச்சயம் உண்டு.

14. சம்பளம் மட்டுமே எல்லாம் என நினைக்காதீர்கள். அது ஒரு பாகம் மட்டுமே என நினையுங்கள். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள். ஈடுபாட்டுடனும் ரசனையுடனும் வேலை செய்யும் போது நீங்கள் வாழ்க்கையை ரசிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் வேலை செய்யும் ஸ்டைலே உங்களை உயர்த்தும்.

15. புதிய வேலைகள் ஏதேனும் வந்தால் தயங்காமல் முதல் அடியை எடுத்து வையுங்கள். மற்றதெல்லாம் கூடவே வந்து விடும். முதல் சுவடு வைப்பது தான் மிகக் கடினமானது. அது தான் உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப் படுத்தவும் செய்யும்.

16. உங்களால் முடியாத வேலை ஏதேனும் வந்தால், இதை என்னால் தனியாகச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை என நேரடியாகவே சொல்லி விடலாம். முடியும் என்று சொன்னால் செய்ய வேண்டும் என்பதில் கவனமாய் இருங்கள்.

17. தினமும் காலையில் உங்கள் வேலையை வரிசைப்படுத்துங்கள். தலை போகும் அவசரம், அவசரம் தான் ஆனால் பரவாயில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தரம் பிரியுங்கள். அவசர வேலைகளில் முதல் கவனம் இருக்கட்டும்.

18. அலுவலக பொருட்களை வீட்டிற்கு எடுத்து வராதீர்கள். ஒரு பேனாவோ, சில பேப்பர்களோ, புத்தகங்களோ எடுத்து வருவது உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது போல. நேர்மையாய் இருங்கள். அது தான் மனிதனின் அடையாளம்.

19. உங்களுக்கென சில வேலை இலட்சியங்களைக் கொண்டிருங்கள். அதை அடைய வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என பட்டியலிடுங்கள். உங்கள் வேலை காலத்தில் அந்த பட்டியல் எப்போதும் உங்கள் மனதில் இருக்கட்டும்.

20. கம்பெனி எனும் பெரிய அளவில் சிந்தியுங்கள். கம்பெனியின் லாபத்தை அதிகரிக்க, பிஸினஸை கூட்ட ஏதெனும் செய்ய முடியுமா என யோசியுங்கள். ‘இது என் வேலை இல்லை”, “இதான் நான் அப்பவே சொல்றேன்.. நீ தான் கேக்கலை”, “வேலை செம கடுப்படிக்குது..” என்பவையெல்லாம் உங்கள் வளர்ச்சிக்கானவை அல்ல. எனவே ஒதுக்குங்கள்.

உங்களுடைய புதுப் புது ஐடியாக்களைப் பின்னூட்டமாய்ப் போட்டால் மகிழ்வேன்

No comments:

Post a Comment