இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 16, 2010

கவனத்தில் கொள்ள வேண்டியது

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் - அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் - ஆடல் பாடல் - கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.


ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் - நடிகர்கள் - நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் - காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் - வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் - இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை - கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் - நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் - மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் - நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் - அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் - கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் - மது அருந்தாமல் - விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் - நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா - நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் - ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க - ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் - சின்னத்திரை எனப்படும் T.V. சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V. க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் - தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் - குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் - செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,
சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் - பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி - எண்ணை - மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? - சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V. மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V. மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை - மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் - அதையும் தாண்டி புனிதமாக சிறிதே - சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் - F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் - படம் பார்ப்பதாலும் கண் என்ன ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.
ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற - அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் - பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் - பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் - பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் - காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் - திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகை நீக்கமற இயக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அருளிய மார்க்கத்தில் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நற்பண்புகளை அடைந்திட முயலவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத மனித நேயம் - சகோதரத்துவம் - மனிதன் மனிதனாக வாழக்கூடிய வழிமுறை வேறெங்கும் இல்லை என்பதை நாம் சொல்லி அல்ல. ஒவ்வொருவரும் படித்து, கேட்டு, உணரவே வலியுறுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்று (3:102) அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனை ஏன் இங்கு விளக்க விளைகிறோம் என்றால் அல்குர்ஆன் கூறுகிறது.இதோ (நபியே) இந்நெறி நூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக: நிச்சயமாக தொழுகை மனிதரை மானக் கேடானவற்றையும் - தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக இறைவனின் தியானம் (திக்ரு) மிகவும் பெரிதான சக்தியாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன் (29:45). நபியவர்கள் சொல்வதை பாருங்கள். எவர் தன் இரு தொடைகளுக்கிடையில் இருப்பதையும் காத்துக் கொண்டாரோ அவர் சுவர்க்கம் புகுவார். (ஆதாரம் - புகாரி) மேலும் எவர் அந்நியப் பெண்களிடம் தன் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். எனவே பார்வை ஒன்றே போதுமே என்ற போக்கில் அனைத்துப் பாவங்களுக்கும் பார்வையை முதலீட்டாக்கி நாம் செய்யும் ஒவ்வொரு அடுத்தடுத்த தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கையிலும் - விபச்சாரத்திலும், மதுவிலும் - சூதிலும் இருக்கும் இன்பத்தை விட நரகத்தில் கொடுமை அதிகம் என்பதை பயந்து நற்பேறுகளை அடைய இஸ்லாமே அருமருந்து என்பதை உளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று - இறைவனுக்கு பயந்து இவ்வுலகில் தடுக்கப்பட்ட சிற்றின்பங்களை துறந்து - மறு உலகில் கிடைக்கும் பேரின்பங்களை அடைந்திட எல்லோரும் முன்வர வேண்டும். நல்லதை பார்த்து, நல்லதைக் கேட்டு - நல்லதைப் பேசி, நல்லதையேச் செய்யும் நன்மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஏதோ பெயரளவில் முஸ்லிமாக இருந்தோம் - வாழ்ந்தும் - மடிந்தோம் என்றில்லாமல் அல்லாஹ் சொல்வது போல் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிமாகவே மரணிக்கும் நற்பேற்றை நாம் அடைவோம்.

பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் - வீடு - வாசல் - தர்மம் - ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.

நன்றி - www.readislam.net

No comments:

Post a Comment