இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4... )

Aug 4, 2010

பாவங்களின் பரிகாரங்கள்!

1)பிறர் குறைகளை மறைத்தல்!

யார் இவ்வுலகில் பிறருடைய குற்றங்குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் மறைப்பான். (முஸ்லிம்)

2)சபையினில் ஏற்பட்ட தவறுகளுக்கு பரிகாரமாக!

ஒரு சபையினில் பங்கெடுத்துவிட்டுக் கலையும் போது,

‘ஸூப்ஹானகல்லாஹூம்ம வபிஹம்திக அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’

பொருள் : அல்லாஹ்வே உன்னைப்புகழ்வதுடன் உனது தூய்மையை நான் துதிக்கின்றேன். உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நான் சாட்சி கூறுகின்றேன். உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். உன் பக்கமே மீளுகின்றேன்’

என்று ஓதினால் அக்கூட்டத்தில் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (இறைவனால்) மன்னிக்கப்பட்டுவிடும். (திர்மிதீ)

3)உழுவை முறையாகச் செய்வது!

யார் உழுவை முறையாகச் செய்கின்றாரோ அவருடைய நகக்கண்கள் உட்பட அவரது உடம்பு முழுவதிலிருந்து பாவங்கள் வெளியேறி விடுகின்றன. (முஸ்லிம்)

4)சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை:

கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

5)பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை:

“உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

6)10 நாட்கள் செய்த பாவங்களைப் போக்கும் ஜூம்ஆத் தொழுகை!

யார் முறையாக உழு செய்து ஜூம்ஆவுக்(காக பள்ளிக்)கு வந்து மௌனமாக இருந்து குத்பா – உரையைக் கேட்கின்றாரோ அவருடைய ஒரு ஜூம்ஆவுக்கும் மறு ஜூம்ஆவுக்கும் இடையேயான பாவங்களும் மேலும் அதிகப்படியான மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் (முஸ்லிம்)

7)ஒரு வருட பாவங்களை போக்க ஆஷூரா நோன்பு!

ஆஷூரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10, 11 ஆகிய) தினங்களில் நோன்பு நோற்பதன் மூலம் கடந்த ஒரு வருட (சிறிய) பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகிறேன். (முஸ்லிம்)

8)இரண்டு வருடங்கள் செய்த சிறிய பாவங்களைப் போக்கும் அரஃபா நோன்பு!

அரஃபா (துல்ஹஜ் பிறை 9 ஆம்) தினத்தில் நோன்பு நோற்பது கடந்த ஒரு வருடம் மற்றும் அடுத்த ஒரு வருட (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம்)

9)பாவம் போக்கும் ஃநபில் தொழுகை!

ஒரு முஸ்லிம் பாவம் செய்துவிட்டால் (அதை உணர்ந்து) உழுசெய்து சுத்தமாகி இரு ரக்அத்துகள் தொழுது மன்னிப்புக் கோரினால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான் (அபூதாவுத்)

10)சிறிய முன்பாவங்கள் மன்னிக்கப்பட!

‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தித் சீந்தினார்கள். பின்னர் தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள். பின்னர் தம் இரண்டு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு ‘நான் உளூச் செய்வதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று கூறினார்கள் என்றார்கள்” என ஹும்ரான் அறிவித்தார். (புகாரி)

11)முன்பாவங்களைப் போக்கும் ரமலான்!

ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி)

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி)

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. (புகாரி)

12)நடைபாதையில் உள்ள தடைகளை அகற்றினால்?

ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான். (புகாரி)

13)பிந்திய இரவில் பாவமன்னிப்பு வழங்கப்படும்!

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான். (புகாரி)

14)அன்று பிறந்த பாலகனைப்போல் பாவமற்றவராக ஆக!

மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். (புகாரி)

15)கடன்பட்டோருக்காக உதவுவதல்:

யார் ஏழையின் (கடன்போன்ற) சிரமங்களை எளிதாக்கி உதவுகின்றாரோ அவருடைய இம்மை- மறுமை சிரமங்களை அல்லாஹ் எளிதாக்கிவிடுகின்றான். (முஸ்லிம்)

பொறுமையுடன் இருந்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்!

ஒரு முஸ்லிமுக்கு நோய், வேதனை, துக்கம், கவலை, தொல்லை, துயரம் முதலான முள் குத்துவது உட்பட ஏதேனும் சோதனை நிகழ்ச்தால் அ(தனைப் பொறுத்துக் கொள்வ)தற்காக அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். (புகாரி)

16)அல்லாஹ்விற்காக நோன்பு நோற்பது!

யார் அல்லாஹ்வின் வழியில் ஒரு நாள் நோன்பிருக்கிறாரோ அந்த ஒருநாள் நோன்பிற்காக அல்லாஹ் அவருடைய முகத்தை எழுபது ஆண்டுகள் நரகத்திலிருந்து தூரமாக்கி விடுகிறான். (புகாரி)

17)பாவங்களை அழிக்கும் தர்மம்!

தர்மம் பாவங்களை அழித்துவிடும். நீர் நெருப்பை அணைப்பதைப் போல. (திரிமிதீ)

18)ஹஜ் மற்றும் உம்ரா – பாவங்களுக்கான சிறந்த பரிகாரங்கள்!

ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)

19)கடல் நுரை போல உள்ள அதிகமான பாவங்களும் மன்னிக்கப்பட வேண்டுமானால்…

‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! (புகாரி)

No comments:

Post a Comment